Responsive image

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி 1

பாசுரம்
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
      கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
      வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
      இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (1)

பதம் பிரிக்கவும்
கதிரவன் குணதிசை சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்;
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 1)

திருப்பள்ளியெழுச்சி 2

பாசுரம்
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
      கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
      ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
      வெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி,
      அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2)

பதம் பிரிக்கவும்
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ !
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி;
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாழ்
வெள் எயிறு உற, அதன் விடத்துனுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 2)

திருப்பள்ளியெழுச்சி 3

பாசுரம்
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
      பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்,
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (3)

பதம் பிரிக்கவும்
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்;
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ !
பாயிருள் அகன்றது, பைம்பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 3)

திருப்பள்ளியெழுச்சி 4

பாசுரம்
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
      வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
      இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,
வாட்டிய வரிசிலை வானவ ரேறே.
      மாமுனி வேள்வியைக் காத்து,அவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே.
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (4)

பதம் பிரிக்கவும்
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன; வயலுள்
இரிந்தன சுரும்பினம்; இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே !
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 4)

திருப்பள்ளியெழுச்சி 5

பாசுரம்
புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
      போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,
கலந்தது குணதிசை கனைகட லரவம்
      களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
      அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
      எம்பெரு மான்.பள்ளி யெழுந்தரு ளாயே. (5)

பதம் பிரிக்கவும்
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்;
போயிற்றுக் கங்குல்; புகுந்தது புலரி;
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்;
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர்; ஆதலில், அம்மா !
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 5)

திருப்பள்ளியெழுச்சி 6

பாசுரம்
இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ?
      இறையவர் பதினொரு விடையரு மிவரோ?
மருவிய மயிலின னறுமுக னிவனோ?
      மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி,
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
      குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்,
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ?
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (6)

பதம் பிரிக்கவும்
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ ! 
இறையவர் பதினொரு விடையரும் இவரோ !
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ !
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 6)

திருப்பள்ளியெழுச்சி 7

பாசுரம்
அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ?
      அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ?
இந்திர னானையும் தானும்வந் திவனோ?
      எம்பெரு மானுன் கோயிலின் வாசல்,
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ?
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (7)

பதம் பிரிக்கவும்
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ !
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவரோ !
எம்பெருமான் ! உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர்; திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை, மற்று இதுவோ !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 7)

திருப்பள்ளியெழுச்சி 8

பாசுரம்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
      மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
      ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ?
      தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (8)

பதம் பிரிக்கவும்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ !
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி;
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்;
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 8)

திருப்பள்ளியெழுச்சி 9

பாசுரம்
ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
      யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
      கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
      சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (9)

பதம் பிரிக்கவும்
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்;
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 9)

திருப்பள்ளியெழுச்சி 10

பாசுரம்
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
      துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
      தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடியென்னும்
அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்-
      காட்படுத் தாய்.பள்ளி எழுந்தரு ளாயே. (10)

பதம் பிரிக்கவும்
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ !
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ !
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர், சூழ் புனல் அரங்கா !
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 10)

Enter a number between 1 and 4000.