Responsive image

திருப்பாவை

திருப்பாவை 21

பாசுர எண்: 494

பாசுரம்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
      மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
      ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
      மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
      போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 22

பாசுர எண்: 495

பாசுரம்
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
      பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
      கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
      திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
      எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 23

பாசுர எண்: 496

பாசுரம்
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
      சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
      மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
      கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
      காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

திருப்பாவை 24

பாசுர எண்: 497

பாசுரம்
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
      சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
      கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
      வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
      இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

திருப்பாவை 25

பாசுர எண்: 498

பாசுரம்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
      ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
      கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
      அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
      வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 26

பாசுர எண்: 499

பாசுரம்
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
      பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
      சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
      ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

திருப்பாவை 27

பாசுர எண்: 500

பாசுரம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
      பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
      சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
      ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
      கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 28

பாசுர எண்: 501

பாசுரம்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
      அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
      குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
      அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
      இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

திருப்பாவை 29

பாசுர எண்: 502

பாசுரம்
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
      குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
      எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
      மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

திருப்பாவை 30

பாசுர எண்: 503

பாசுரம்
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
      திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
      பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன
      இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
      சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
      வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
      வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
      வையம் சுமப்பது வம்பு.
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
      திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
      பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
      உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
      வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

Enter a number between 1 and 4000.