Responsive image

திருப்பாவை

திருப்பாவை 11

பாசுர எண்: 484

பாசுரம்
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
      செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
      புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
      முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
      எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

திருப்பாவை 12

பாசுர எண்: 485

பாசுரம்
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
      நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
      பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
      மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
      அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 13

பாசுர எண்: 486

பாசுரம்
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
      கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 14

பாசுர எண்: 487

பாசுரம்
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
      செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
      தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
      நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
      பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 15

பாசுர எண்: 488

பாசுரம்
எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
      சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
      வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
      எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
      வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

திருப்பாவை 16

பாசுர எண்: 489

பாசுரம்
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
      கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
      ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
      தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
      நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

திருப்பாவை 17

பாசுர எண்: 490

பாசுரம்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
      எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
      எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
      உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
      உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 18

பாசுர எண்: 491

பாசுரம்
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
      நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
      வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
      பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
      வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 19

பாசுர எண்: 492

பாசுரம்
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
      மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
      வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
      எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
      தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

திருப்பாவை 20

பாசுர எண்: 493

பாசுரம்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
      கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
      வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
      நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
      இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

Enter a number between 1 and 4000.