Responsive image

திருநெடுந்தாண்டகம்

திருநெடுந்தாண்டகம் 21

பாசுரம்
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
      மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
      இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
      கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.
      அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. (2) 21

திருநெடுந்தாண்டகம் 22

பாசுரம்
நைவளமொன் றாராயா நம்மை நோக்கா
      நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி
      எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
      கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்கு
      இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே. 22

திருநெடுந்தாண்டகம் 23

பாசுரம்
உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்
      ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச்
      சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக்
      கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன்
      என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே? 23

திருநெடுந்தாண்டகம் 24

பாசுரம்
இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம்.
      இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட,
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்
      பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி
      உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து
      புனலரங்க மூரென்று போயி நாரே. 24

திருநெடுந்தாண்டகம் 25

பாசுரம்
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
      கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே
      தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும்
      என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே
      புனலரங்க மூரென்று போயி னாரே. 25

திருநெடுந்தாண்டகம் 26

பாசுரம்
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத்
      தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த
      அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்
      அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது
      நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே. 26

திருநெடுந்தாண்டகம் 27

பாசுரம்
செங்கால மடநாராய். இன்றே சென்று
      திருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு,
எங்காத லென்துணைவர்க் குரைத்தி யாகில்
      இதுவொப்ப தெமக்கின்ப மில்லை, நாளும்
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
      பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன், தந்தால்
இங்கேவந் தினிதிருந்துன் பெடையும் நீயும்
      இருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே. (2) 27

திருநெடுந்தாண்டகம் 28

பாசுரம்
தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச்
      சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
      வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு
      போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த
      எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. 28

திருநெடுந்தாண்டகம் 29

பாசுரம்
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை
      அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக்
      கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை
      விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை
      நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. (2) 29

திருநெடுந்தாண்டகம் 30

பாசுரம்
மின்னுமா மழைதவழும் மேக வண்ணா.
      விண்ணவர்தம் பெருமானே. அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த
      அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன்
      மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய_ல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்
      பழவினையை முதலரிய வல்லார் தாமே. (2) 30

Enter a number between 1 and 4000.