Responsive image

குலசேகர_ஆழ்வார்

பெருமாள் திருமொழி 1

பாசுர எண்: 647

பாசுரம்
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி
      இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்
      அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
      திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
      கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே. 1.1

பெருமாள் திருமொழி 2

பாசுர எண்: 648

பாசுரம்
வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த
      வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்
      மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்
      கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்
      வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே 1.2

பெருமாள் திருமொழி 3

பாசுர எண்: 649

பாசுரம்
எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்
      எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்
      தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற
      அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்
      கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே 1.3

பெருமாள் திருமொழி 4

பாசுர எண்: 650

பாசுரம்
மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை
      வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை
      அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
      பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள்
      கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே 1.4

பெருமாள் திருமொழி 5

பாசுர எண்: 651

பாசுரம்
இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்
      தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த
துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால்
      தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ
      மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென்
      மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே 1.5

பெருமாள் திருமொழி 6

பாசுர எண்: 652

பாசுரம்
அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை
      அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித்
      திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்
      கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்
      உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே 1.6

பெருமாள் திருமொழி 7

பாசுர எண்: 653

பாசுரம்
மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி
      ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்
துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத்
      தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி
      அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள்
      நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே 1.7

பெருமாள் திருமொழி 8

பாசுர எண்: 654

பாசுரம்
கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
      கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக்
      கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
      திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி
      வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே 1.8

பெருமாள் திருமொழி 9

பாசுர எண்: 655

பாசுரம்
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
      குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்
      மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும்
      திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்
      பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே 1.9

பெருமாள் திருமொழி 10

பாசுர எண்: 656

பாசுரம்
வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய
      மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்
      சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்
      அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
      இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே 1.10

Enter a number between 1 and 4000.